அரக்கோணம்: ‛‛நாட்டுக்கோழி வளர்த்தால், 1000 கோழிக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்,'' என கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் பயிற்சி முகாம் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இன்று நடந்தது. வேலுார் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வடமாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாட்சரம் வரவேற்றார். ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டுக்கோழி வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 5 பேர் வீதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியத்தில் 35 பேரும், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கோழிப் பண்ணை அமைக்க பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக பண்ணை அமைக்க ஏற்ற இடம், குடிநீர், போக்குவரத்து வசதி, தொழில் முனைவோருக்கு முன்னுரிமை போன்றவை குறித்து தெரிவிக்கப்படும்.

ஒரு கோழிக் குஞ்சு 30 ரூபாய் கொடுத்து 1,000 வாங்கினால் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதற்கு 15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். கோழி குஞ்சுகளுக்கு தேவையான தீவனம், குஞ்சு பொரிக்க இன்கு பேட்டர் வாங்க மானியம் வழங்கப்படும். 1.50 லட்சம் ரூபாய் செலவில் 1,000 நாட்டுக் கோழிகள் வளர்ப்பதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

படித்த வேலை இல்லாத இளைஞர்கள் இதில் சேர்ந்து கோழிகளை வளர்த்து பயன் பெறலாம். தற்போது பிராய்லர் கோழிகளை விட நாட்டு கோழிகளுக்கு தேவை அதிகமாக உள்ளது. நாட்டுக்கோழி குஞ்சுகளை வேலுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் பெறலாம். இதற்கு பதிவு செய்தால் 45 நாட்களுக்கு பிறகு வழங்கப்படும்.
கோழிக்கான தீவினங்களை அரைத்து தருவதற்கு மையங்கள் விரைவில் அமைக்கப்படும். நாட்டுக் கோழி வளர்ப்பை பொருத்தே கொள்முதல் மையங்கள் அமைப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். அதுவரை உற்பத்தியாளர்களே பெரிய ஓட்டல்கள், வாரச்சந்தை, இறைச்சி கடைகளில் விற்பனை செய்து கொள்ள வேண்டும். நேரடியாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் பங்கேற்ற நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்கள் கூறியதாவது:நாட்டுக் கோழிகளை வளர்த்த பிறகு விற்பனை செய்ய அரசு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தனியாரிடம் விற்றால் நஷ்டம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் 2 லட்சம் சேவல்கள், 10 லட்சம் கோழிகளை விற்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் நடந்த பயிற்சி முகாமில், பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை பல்கலைக்கழத்தால் தயாரிக்கப்பட்ட தானுவாஸ் கிராண்ட் என்ற நுண்ணுாட்டச் சத்து மருந்து 200 கறவை பசு வளர்த்த 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில், கால்நடை மருத்துவர்கள் ஜெயமணி, சுமித்ரா, ஸ்ரீதேவி, ராஜேஷ்குமார், சக்தி நாகராஜ், உதவி கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.