அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்...!!

அமைவிடம் :

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும்.

மாவட்டம் :

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம், சிதம்பரம், கடலூர் மாவட்டம். 

எப்படி செல்வது?

சிதம்பரத்திலிருந்து சுமார் 20கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சி.சாத்தமங்கலத்திற்கு பேருந்து வசதிகள் உண்டு. சேத்தியாதோப்பில் இருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

கோயில் சிறப்பு :

சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு. 

இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலை விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். 

மூல விக்ரகமான பூரணை, புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். 

அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. 

இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். 

இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. 

திருவிழா : 

வைகாசி பிரமோற்சவம் எனப்படும் பத்து நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் பிரமோற்சவம் பத்தாம் நாள் பகலில் அருகில் உள்ள வெள்ளாற்றில் தீர்த்தவாரியும், இரவு பூரணை, புஷ்கலையுடன் திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் புஷ்ப பல்லக்கு நடைபெறும். அன்று பல ஊர்களில் இருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வந்து சாஸ்தாவிற்கு நாதஸ்வர இசை அஞ்சலி செலுத்துவர். 

பிரார்த்தனை : 

கையில் சாட்டையுடன் உள்ள சாஸ்தாவை வணங்கினால் எதிரி பயம் நீங்கும் என்பதும், பூரணை, புஷ்கலையுடன் உள்ள கல்யாண வரதர் எனப்படும் கல்யாண சாஸ்தாவை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. 

நேர்த்திக்கடன் :

இங்குள்ள சாஸ்தாவிற்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.