ராணிப்பேட்டை மாவட்டம் அருங்குன்றம் கிராமம் கீழண்டை தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 32). இவரது உறவினர்கள் மணிகண்டன் (31), மாணிக்கம்மாள் (53), யோகலட்சுமி (9), சரஸ்வதி (37), தருண் (11). இவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் காஞ்சீபுரம் மாவட்டம் கூரம் கிராமத்தில் இருந்து அருங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தணிகாசலம் மற்றும் மணிகண்டன் ஓட்டிச்சென்றனர்.
மேலம்பி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த ஒரு தனியார் நிறுவன பஸ், 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் படுகாயம்
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார், படுகாயம் அடைந்த தணிகாசலம், யோகலட்சுமி, மணிகண்டன், சரஸ்வதி, தருண் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்ககுப்பதிவு செய்து தனியார் நிறுவன பஸ் டிரைவரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த குமார் (41) என்பவரை கைது செய்தனர்.