ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 9 மாவட்டங்களில் மதுவிற்பனைக்கு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அது போல் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12 ஆம் தேதியும் மது விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறுகிறது.
அது போல் இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்குள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் முதல் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்குள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியில் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளதால் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 12 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதன்படி மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அப்பகுதிக்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே வாக்குப் பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும் அப்பகுதிகளுக்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக் கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.