ஆற்காட்டில் வாலிபரை தாக்கிய சகோதரர்களை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு இந்திரா நகரை சேர்ந்தவர் விஜய் ( 21 ). இவர் கண்ணமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை செய்கிறார். கடந்த 3 ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு இந்திரா நகர் வழியாக விஜய் பைக்கில் சென்றார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது தம்பி சக்திவேல் ஆகியோருக்கும், விஜய்க்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் விஜய்யை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசில் விஜய் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி, எஸ்ஐ மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிந்து மணிகண்டன் ( 40 ), அவரது தம்பி சக்திவேல் ( 35 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.