ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு விடுதிகளில் சேர 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்களுக்காக 5 விடுதிகளும், மாணவிகளுக்காக 4 விடுதிகளும் மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயில்கின்ற மாணவர்களுக்காக 1 விடுதியும், மாணவிகளுக்கு 3 விடுதிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.