ஆற்காடு கஸ்பா, கரிமுல்லா தர்கா பகுதியை சேர்ந்தவர் முபாரக் (32), தொழிலாளி. இவரது மனைவி ஷபானா. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முபாரக் திருமணத்துக்கு பிறகு குடும்பத்துடன் மாமியார் வீடான கஸ்பா பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் முபாரக்கிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுமாம். கடந்த 6ம் தேதி மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் முபாரக் வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்த டூவீலரில் இருந்து பெட்ரோல் எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்த முபாரக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முபாரக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.