ஆற்காடு அருகே உள்ள பூட்டுத்தாக்கு மேலாண்டை தெருவை சேர்ந்தவர் பாலாஜி (41). லாரி உரிமையாளர். இவரது சகோதரி மகன் நவீன்குமார். கடந்த 16ம் தேதி மாலை 5.30 மணியளவில் அரப்பாக்கம் பைபாஸ் சாலை, தனியார் பெட்ரோல் பங்க் அருகில் லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
மறுநாள் (17ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் லாரி டிரைவர் கோபி அங்கு சென்று பார்த்தபோது லாரி இல்லாதது கண்டு அதிர்ச் சியடைந்தார். இதுகுறித்து பாலாஜி மற்றும் நவீன்குமாரிடம் தெரிவித்துள்ளார். 3 பேரும் சேர்ந்து லாரியை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் கடந்த 26 ம்தேதி பாலாஜி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் உதய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று (28ம் தேதி) வேலூர் மாவட்டம், மாதனூர் சாலையோரம் லாரியுடன் இருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆம்பூர் தேவிகாபுரத்தை சேர்ந்த யுவராஜ் (37) மற்றும் ரெட்டிதோப்பை சேர்ந்த ஆரிப் (29) என்றும், அரப்பாக்கம் பைபாஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் போலீ சார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.