‘போகி பண்டிகை’ அன்று செய்ய வேண்டியதும்! செய்யக் கூடாததும்!
போகி என்றாலே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்கிற பழமொழி தான் நம் நினைவிற்கு முதலில் வரும். வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் எரிப்பது மட்டுமே போகி அல்ல! முந்தைய காலங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்து, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழைய பொருட்களான உடைந்த முறம், நைந்து போன துணிமணிகள், கிழிந்த பாய், தலையணை, துடைப்பம், கூடைகள் போன்ற வீணான பொருட்களை போட்டு எரிப்பது வழக்கம்.
போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது:
மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய நாளே வீடு முழுவதும் தூசுகள் இல்லாமல் சுத்தமாக துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் மறுநாள் போகி பண்டிகையின் பொழுது தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், நம் மனதில் இருக்கும் தேவையற்ற கெட்ட விஷயங்களையும் எரித்து சிறப்பாக, மனமார, புத்துணர்ச்சியோடு கொண்டாட முடியும். இப்படி சுத்தம் செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் தேவையற்ற குப்பைகளை அகற்ற வேண்டும்.
இந்திரனின் ஆனவன் குணம்:
போகம் என்றால் இன்பம், மகிழ்ச்சி என்கிற பொருள்படுகிறது. போகம் என்கிற சொல்லுக்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாயிகளுக்கு மழையைப் பொழியும் இந்திர பகவானை சிறப்பிக்கும் விழாவாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. தான் மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது என்கிற கர்வம் கொண்ட இந்திரனின் ஆணவத்தை அடக்க கோகுல கிருஷ்ணன் இந்திர வழிபாட்டை தடை செய்து, கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்ய மக்களை திசை திருப்பினார். இதனால் கோபமுற்ற இந்திரன் தொடர்ந்து ஏழு நாட்கள் விடாது பெருமழை பொழிய செய்து மக்களைத் துன்புறுத்தினான்.
மக்களை காத்த கிருஷ்ணர்:
மக்களைக் காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆணவத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரை பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை அன்று இந்திர விழாவாகக் கொண்டாட வரமளித்தார். இந்திரன் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கை பெற சுக்ர அருள் நமக்கு தேவை. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பொழுது அவன் பணக்காரனாக இருக்கிறான். தேவையற்ற, வீணான, கழிந்த, முதிய மற்றும் பழைய ஆகிய சொற்களுக்கு காரகத்துவம் பெற்றுள்ளவர் சனீஸ்வர பகவான்.
போகிப் பண்டிகையின் சிறப்பு:
தீயனவற்றை எரித்து, உழைப்பின் பலனாக நல்லனவற்றை தரித்து சனி பகவான் அருளை பெற்றுக் கொண்டு, விடியும் விடியல் புதுப்பொலிவுடன், புதிய பொருட்களுடன், புதிய இல்லம், புதிய வண்டி, வாகனம் என்று புத்தாடைகள் தரித்து, புதிய பானையில் இனிப்பான சர்க்கரை பொங்கல் படைத்து சுக்கிர பகவானின் அருளையும் பெற்றுக் கொண்டு இருண்டு போன பழைய பொருட்கள் மற்றும் பழைய பிரச்சனைகளை தூக்கி எறிந்து விட்டு வெளிச்சத்தை நோக்கிய புதிய சூரியனைக் காண வழிபடுவதே போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் தார்மீக காரணங்களாகும். இவ்வழியே இவ்வருடம் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம், அனைவருடனும் இணைந்து மகிழ்வோம்.