பொங்கல் பண்டிகை கொண்ட்டாடம் ; தமிழக முதல்வர் அவசர ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகைகளின் போது, கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக வரவுள்ளன. எனவே பொங்கல் விழா கொண்ட்டாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்து சேவை, அரசு விரைவு பேருந்துகளின் சேவையை தடை செய்வது, வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துவது, சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது, கடற்கரையில் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து அரசின் சார்பில் நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதன்படி நாளையே புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.